Tamilnadu Chief General Relief Fund : இந்தியாவில் கொரானா வைரஸ் பரவல் அதிதீவிரமாக இருந்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வைரஸில் இருந்து தமிழகத்தை காக்க பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள், நிறுவனங்கள், அரசு தொழிலாளர்கள், அரசு சார் மற்றும் அரசு சாரா தொழிலாளர்கள் என பலரும் நிவாரண நிதி அளித்து வந்தனர்.
தற்போது முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு என்பது குறித்த விவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 21.7.2020 முடிய இதுவரை ரூ.394.14 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
மனமுவந்து நிதியுதவி அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.