‘கூலி’ பட சவுபின் சாகிர், வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தில், தயாள் என்ற கேரக்டரில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திவர் மலையாள நடிகர் சவுபின் சாகிர் என்பது தெரிந்ததே.
இவர், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து சவுபின் சாகிர் தயாரித்தார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கேரள மாநிலம் அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சவுபின் சாகிர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், நாளை மறுநாள் 5-ந்தேதி துபாயில் நடக்கும் விருது விழாவில் கலந்துகொள்ள அனுமதி கோரி, எர்ணாகுளம் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சவுபின் சாகிர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சி வெளிநாட்டில் இருப்பதால், அவரை அனுமதிக்கக் கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, சவுபின் சாகிர் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவர் துபாய் செல்ல தடை விதித்தது.

soubin shahir denied permission to attend dubai event
