எப்போதும் அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்: சிவகார்த்திகேயன் பேச்சு..

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘மதராஸி’ படம். இப்படம் இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் ஏறுமுகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ‘எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு விஜயகாந்த் சாருடன் ‘ரமணா’ படம் செய்தார். அது மிகவும் ஸ்பெஷலான படம். அதன் பிறகு ‘கஜினி’ ‘துப்பாக்கி’. இது தமிழ் சினிமாவில் மாஸ் படங்களை மறுவரையறை செய்தது.
அதன் பிறகு ரஜினிகாந்த், சல்மான் கான் என நிறைய பேருடன் படம் செய்தார். அந்த பட்டியலில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி. ‘மதராஸி’ படத்தின் கதையை ஷாருக்கானிடம் சொன்னதாக கூறியிருந்தார். அந்த எஸ்ஆர்கே பண்ண வேண்டிய படத்தை இந்த எஸ்கே பண்ணதே மிகப்பெரிய விஷயம்.
’கோட்’ படத்தின் விஜய்யுடன் அந்த காட்சியில் நடித்த பிறகு, அவரிடமிருந்து நான் ஊக்கம் பெறும் ஒரு காட்சியாகத்தான் நான் அதைப் பார்த்தேன். ஆனால், நிறைய பேர் குட்டித் தளபதி, திடீர் தளபதி என்று சொல்கிறார்கள். ஆனால், அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. அண்ணன் அண்ணன் தான். தம்பி தம்பிதான்.
ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழவை அழைத்து பாராட்டுகிறேன். ஆனால், இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று கேட்கிறார்கள். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?’ என்றார். ‘மதராஸி’ பட டிரெய்லர் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படம் முருகதாசுக்கு வெற்றிப் படமாக அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
