Nalini Granted Parole :
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருந்து மகளின் திருமணத்தை காண 30 நாட்கள் பரோலில் நளினி வெளியே வந்தார். பலத்த பாதுகாப்புடன் அவர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி தனது மகளின் திருமண தேவைக்காக 6 மாத காலம் பரோல் வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக இந்த வழக்கில் தாமே வாதாடினார்.
அவ்வாறு வாதாடிய நளினி, எனது மகளுக்காக நான் தற்போது வரை எந்தவொரு சம்பிரதாய சடங்குகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே திருமணத்திற்காக 6 மாத காலம் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நளினியின் கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே தமிழக அரசின் வாதத்தை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இன்று நளினி பரோலில் 30 நாட்களுக்கு வெளியே வந்தார்.
தற்போது, இவர் ரங்காபுரத்தில் உள்ள சிங்கராயன் என்பவரது வீட்டில் தங்கவைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கராயர் திராவிட இயக்க தமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளராக உள்ளார். சிங்கராயர் என்பவரது வீட்டில் தங்கி தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வார்.
அதுமட்டுமின்றி 30 நாட்கள் அவர் தங்கும் இடங்கள் குறித்த அறிக்கைகள் சிறையில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் 24 மணி நேர பாதுகாப்புடன் நளினி பரோலில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரோல் காலத்தில் ஊடகங்களில் பேட்டி அளிக்கக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகள் நளினிக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
முன்னதாக, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.
அதற்கு, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிடமுடியாது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.