Movie Celebration : தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் பி.டி செல்வகுமார். தளபதி விஜயின் புலி படத்தின் தயாரிப்பாளரான இவர் கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக தொடர்ந்து மக்களுக்காக உதவி வருகிறார்.
இன்று மயிலாடி என்ற பகுதியில் கல் உடைக்கும் 51 தொழிலாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
இதனையடுத்து நாகர்கோவில் சென்றுள்ள அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது விஸ்வாசம், பேட்ட படத்தின் கொண்டாட்டங்களில் நடந்த அசம்பாவிதங்கள் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களின் படங்களின் போது பேனர், கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தல் போன்ற நிகழ்வுகளால் இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருவது வாடிக்கையாகி வருவது மனதிற்கு வேதனை அளிக்கிறது.
இந்த வருடம் கூட விஸ்வாசம் படத்தின் கொண்டாட்டத்தில் விழுப்புரத்தில் அஜித்தின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து விழுந்து 7 பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே போல் கத்தி பட ரிலீஸின் போது பாலக்காட்டில் உன்னி என்ற இளைஞர் விபத்தில் சிக்கி இறந்தார்.
தலைவா படம் ரிலீஸ் தள்ளி போனதால் இளைஞர் ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டார். இது போன்ற பல சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.
தொடர்ந்து நடைபெறாமல் இருக்க பெரிய நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தங்களுடைய ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்க்குமாறும் சினிமாவை சினிமாவாக தங்களது குழந்தைகளை விழிப்புணர்வோடு வளர்க்க வேண்டும்.
நடிகர்களுக்காக ரசிகர்கள் உயிரை விடுவது போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் தான் நடக்கின்றன.
நடிகர்கள் எல்லாம் ஒரு படத்திற்காக 40 கோடி, 50 கோடி என சம்பளம் வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்காக இப்படியான கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டு தங்களது உயிரை மாய்த்து கொண்டால் உங்களின் குடும்பத்தின் நிலை என்னவாகும்? கஷ்டப்பட்டு வளர்ந்த அம்மா அப்பாவை பற்றி யோசித்து செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் படங்களுக்காக பெரிய பெரிய கட் அவுட், பேனர் வைப்பதற்கெல்லாம் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். அதற்காக கலப்பை மக்கள் இயக்கம் சார்பாகவும் முதல்வரிடம் மனு ஒன்றை அளிக்க உள்ளோம் எனவும் கூறினார்.
அந்த காலம் முதல் ரஜினி, விஜய், அஜித் என எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் நடிகர்களால் ரசிகர்கள் உயர்ந்ததாக சரித்திரம் இல்லை. ஆகவே தொழில் கவனம் செலுத்துங்கள் எனவும் கூறினார்.