MK.Stalin :
திருவாரூர்: கருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நாளை மறுநாள் (18.04.19) அன்று நடக்க இருக்கிறது.
இந்நிலையில் தேர்தலையொட்டி, கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதிக்குட்பட்ட வலங்கைமானில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பெரிய துறைமுகம் அமைக்கப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும் தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
அதை தொடர்ந்து, கையை பிடித்து கெஞ்சியும் கருணாநிதிக்கு இடம் தர முதல்வர் பழனிசாமி மறுத்துவிட்டார்.,
ஜனாதிபதி, பிரதமர்கள் என பலரை உருவாக்கியவர் கலைஞர், அப்படிப்பட்டவருக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா? என்று கேள்வி எழுப்பினார்.. இவ்வாறு பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசினார்.