விஜித் சரவணன், ஸ்வேதா டாரதி, அப்புக்குட்டி , சிவ சேனாதிபதி, ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன், வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் மற்றும் பலர் நடிப்பில் பா ஐயப்பன் அவர்களின் இயக்கத்தில் சரவணன் செல்வராஜ் தயாரிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் கட்சிக்காரன்.
படத்தின் கதைக்களம் :
ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் தனக்கான இழப்பீடு கேட்பதும்தான் கட்சிக்காரன் படத்தின் கதை.
படத்தைப் பற்றிய அலசல் :
தனது அபிமானமிக்க தலைவருக்காக முழு விசுவாசத்துடன் உழைக்கிறான் சரவணன். போஸ்டர் ஒட்டுவது ,கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது ,கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது ,விழாக்கள் ஏற்பாடு செய்வது என்று மும்மரமாக ஈடுபடுகிறான். இப்படிப்பட்ட இவனுக்கு கட்சியில் அநீதி இழைக்கப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாகவும் எதார்த்தமாகவும் அப்பாவி தனமான முகத்துடனும் நடித்து அசத்தியுள்ளார் சரவணன்.
அவரது மனைவி அஞ்சலியாக நடித்திருக்கும் ஸ்வேதா டாரதி அப்பாவி கட்சித் தொண்டனின் மனைவியாக சரியாகப் பொருந்துகிறார். நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைப் போராட்டத்தை, கவலைகளை முகத்தில் காட்டுகிறார். அந்தக் கிராமத்து முகமும் தோற்றமும் நேர்த்தி. அளவான அழகு, நடிப்பு.
மக்கள் கட்சித் தலைவராக வரும் சிவ சேனாதிபதி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டியும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். கதாநாயகனின் நண்பனாக வரும் தெனாலியும் நீள வசனங்கள் பேசி தனது அங்க சேட்டைகள் மூலம் ஆங்காங்கே சிரிப்பையும் வரவழைக்கிறார்.
மதன் குமார் ஒளிப்பதிவும்.ரோஷன் ஜோசப்,சி.எம். மகேந்திரா இசையும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன.
படத்திற்குப் பலம் துணிச்சலான வசனங்கள் தான் .ஆனால் வெறும் வசனங்களை மட்டும் வைத்து ஒரு படத்தை நிறைவு செய்துவிட முடியாது. படம் பேசப்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் .வெறும் வாய் வார்த்தையாக பேசிக் கொண்டே இருப்பது தான் சலிப்பூட்டுகிறது .
அரசியல்வாதிகள் பற்றி மக்கள் மனதில் பதிந்திருக்கும் பல அபிப்ராயங்களை மாற்றும் வகையில் துணிச்சலான வசனங்களில் மூலம் சில உண்மைகளைப் போட்டு உடைக்கிறார்கள். அப்படிச் சொல்ல வந்த கருத்துக்காக இந்த முயற்சியை ஆதரிக்கலாம்.காட்சிகளில் அழுத்தம் சேர்த்து எடுத்திருந்தால் முழுத்தகுதி உள்ள திரைப்படமாக அனைவரையும் கவர்ந்திருக்கும்.