மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்ஹாசன் பேச்சு
‘அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது’ என கூறியுள்ளார் கமல். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
கேரளாவில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. வரலாற்று அறிஞர்களால் மொழி குறித்த வரலாறுகள் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழர், கர்நாடகாவை சேர்ந்த ஐயங்கார், ரெட்டி என பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இது போல் நடந்ததில்லை.
கர்நாடகாவில் பிறந்து தமிழகத்தில் முதலமைச்சரான ஒருவருக்கு, ஒருமுறை பிரச்சினை வந்தபோது கன்னடர்கள் ஆதரவு கொடுத்தவுடன், அந்த முதலமைச்சரை மீண்டும் கர்நாடத்துக்கே வருமாறு அழைத்தனர். எனவே ‘தக் லைஃப்’ படத்தையும் கமல்ஹாசனையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
மொழி குறித்து பேச அரசியல்வாதிகளுக்கு தகுதியில்லை. அந்த கல்வி அறிவும் அவர்களுக்கு இல்லை. இது எனக்கும் பொருந்தும். எனவே, இந்த விவாதத்தை வரலாற்று அறிஞர்கள், மொழி வல்லுநர்களிடம் விட்டுவிடலாம். வடபகுதியைச் சேர்ந்தவர்கள் பார்வையில் பார்த்தால், அவர்கள் சொல்வது சரியாக இருக்கும். தென்குமரி பக்கம் இருந்து பார்த்தால், நான் சொன்னது தான் சரியாக இருக்கும்.
கன்னடர்கள் நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வடக்கிலிருந்து வந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்பதை வரலாற்று அறிஞர்கள் முடிவு செய்யட்டும். இது பதில் இல்லை. விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது’ என கூறியுள்ளார்.