மூன்று சேனல்களில் இன்று விவாத நிகழ்ச்சி என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விவாத நிகழ்ச்சிகளுக்கென எப்போதும் தனி வரவேற்பு உண்டு. நடிகரும் இயக்குனருமான விசு தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் தொடங்கி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா உள்ளிட்ட நிகழ்ச்சி வரை நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற புத்தம் புதிய விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது, நீயா நானா விவாத நிகழ்ச்சிக்கு டப் கொடுக்கும் வகையில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது, இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரு பழனியப்பன் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
மேலும் தற்போது இவர் வேறொரு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் வா தமிழா வா என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார், இப்படியான நிலையில் எதார்த்தமான கேள்விகள் மூலமாக பல திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்து மக்களை கவர்ந்த ஆவுடையப்பன் வரும் ஜூலை 16 முதல் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. சாமானிய மக்களில் ஒருவராக காமன் மேனாக இந்த இடத்திற்கு வந்துள்ள இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நீயா நானா நிகழ்ச்சியை மிகவும் எதார்த்தமான உரையாடல்களுடன் கொண்டு சென்று வருகிறார் கோபிநாத், அதே போல் கரு பழனியப்பன் அவருக்கான பாணியில் இலக்கிய நயத்துடன் நிகழ்ச்சியை கொண்டு சென்று வருபவர், இப்படியான நிலையில் ஆவுடையப்பன் அவர்களும் எதார்த்தமான நடையில் எப்பேர்ப்பட்ட கேள்விகளுக்கும் எளிதாக பதிலை வர வைக்க கூடிய திறமை கொண்டவர். இதனால் இவரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று மாறுபட்ட சேனல்களில் மூன்று விவாத நிகழ்ச்சிகள். அதில் தமிழா தமிழா மற்றும் வா தமிழா வா நிகழ்ச்சிகள் மதியம் 12 மணிக்கும் நீயா நானா நிகழ்ச்சி 12.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியின் முதல் எபிசோட் வரும் ஜூலை 16-ம் தேதி ஒளிபரப்பாக இருப்பதால் கோபிநாத், கரு பழனியப்பன் வரிசையில் இடம் பிடிப்பாரா என்ற ஆவல் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆக மொத்தத்தில் இனி வரும் ஒவ்வொரு ஞாயிறும் மதிய வேளை மக்களுக்கு விவாத விருந்து தான்.