நடிகர் ஸ்ரீ, ஆஸ்பத்திரியில் அனுமதி: இயக்குனர் லோகேஷ் உருக்கமான வேண்டுகோள்

லோகேஷ் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ படத்தில் நடித்த ஸ்ரீ, தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

நடிகர் ஸ்ரீ.யின் புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள், அவருக்கு காச நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில் இவரது உடல்நிலை குறித்து இயக்குநரும், நடிகர் ஸ்ரீ-யின் நண்பருமான, லோகேஷ் கனகராஜ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

‘நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி சமூக வலைதளத்தில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு எடுத்துள்ளார். மேலும் அவருக்கு தற்போது தேவை என்பது, நிம்மதிதான். மேலும் அவரை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

நாங்கள் உங்களிடத்தில் தயவு கூர்ந்து கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அதாவது, அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம். அவை மிகவும் எங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

தயவு கூர்ந்து அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் அடங்கிய செய்திகள், வீடியோக்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களை உறுதிப்படுத்தப்படாத தகவல்களை எக்காரணம் கொண்டும் பரப்ப வேண்டாம். இந்த நெருக்கடியான நேரத்தில், எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் நன்றிகள்’ என தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ஸ்ரீ நேற்று வெளியிட்டிருந்த தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,’ நான் கடந்த ஒரு ஆண்டு நான்கு மாதங்கள் மற்றும் 16 நாட்களாக சிக்ரெட் புகைப்பதில்லை. நான் அவற்றை கடந்த 2024-ம் ஆண்டு புத்தாண்டில் இருந்தே விட்டுவிட்டேன். இதை தெளிவுபடுத்துவதற்காக இந்த வீடியோவைப் பதிவிடுகிறேன்’ என்று பேசியுள்ளார்.

மேலும் சிகரெட்டை விட்ட முதல் 90 நாட்களில் அதற்கு பதிலாக பால் கலக்காத காபியைக் குடித்தேன் எனவும், அனைவரும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.