‘தக் லைஃப்’ படம் இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை : கோர்ட் உத்தரவு..
‘தக் லைஃப்’ படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு காண்போம்..
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்பட பலர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் உலகெங்கும் நாளை ரிலீஸாகிறது.
இந்தப் படத்தை சட்ட விரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3, 500 திரையரங்குகளில் ‘தக் லைஃப்’ படம் வெளியாக உள்ளது. மிகுந்த பொருட்செலவில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்குப் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரைக்கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, தக் லைஃப் திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சூழலில், கர்நாடகாவிலும் இப்படம் வெளியீடாகும் வகையில், கமலுடன் பேச்சு வார்த்தை நடத்த, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை முடிவெடுத்துள்ளது.
