மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமயமாக கொண்டாடப்பட்டு வருபவர் பாரதிராஜா. பல்வேறு படங்களை இயக்கிய இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் என இரண்டு படங்களில் நடித்திருந்தார்.
தற்போது உடல் நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.