சென்னை: உள்ளாட்சி தேர்தல் தேதிகள் குறித்த அட்டவணை இன்று காலை 10 மணிக்கு தமிழக மாநில தேர்தல் அதிகாரி அறிவிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது .
தமிழகத்தில் சரியாக 3 வருடங்களுக்கு மேலாக காலம் தாழ்த்தப்பட்டு தற்போது உள்ளாட்சி தேர்தல் ஒருவழியாக நடக்கவுள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலை 2017-ம் வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது குறிப்பிடதக்கது.
அதையடுத்து, தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடக்கவிடாமல் பல்வேறு வழக்குகள் மற்றும் காரணங்கள் சொல்லி உள்ளாட்சி தேர்தல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்த அட்டவணை இன்று காலை 10 மணிக்கு தமிழக மாநில தேர்தல் அதிகாரி அறிவிக்கவுள்ளார். முன்னதாக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக கட்சி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடுத்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.