விவாகரத்து செய்தி குறித்து நடிகை அசின் அளித்திருக்கும் விளக்கம் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் வரவேற்பை தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருந்தார்.

அதன் பிறகு பாலிவுட் திரை உலகிலும் கலக்கிக் கொண்டிருந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். அதன் பிறகு ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்து இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் அசின் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தன் கணவர் தொடர்பான அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக நடிகை அசின் அளித்திருக்கும் விளக்கம் வைரலாகி வருகிறது. அதில் அவர் ‘எங்களின் கோடைகால விடுமுறைக்கு இடையே ஆதாரம் இல்லாத இந்தச் செய்தியைப் பார்க்கும் இந்நேரத்தில் நாங்கள் இருவரும் எதிரே, எதிரே அமர்ந்துகொண்டு காலையுணவை அருந்திக்கொண்டிருக்கிறோம். இது, எங்கள் திருமணத்திற்காக குடும்பத்தினர் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் பிரிந்துவிட்டதாக வெளியான வதந்தியை நினைவுபடுத்துகிறது. உருப்படியாக எதையாவது செய்யுங்கள். இந்தக் கோடைகால விடுமுறையில் என் 5 நிமிடம் வீணானது.’ எனப் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.