நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருந்ததை பற்றி குறிப்பிட்டு மணிரத்தினம் மற்றும் கல்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் மணிரத்தினம் பலர் இயக்க முயற்சி செய்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வரவேற்பு கிடைத்து வந்தாலும் சில இடங்களில் எதிர்மறை விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது நாளில் படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்து இரண்டு நாள் முடிவில் ரூபாய் 150 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வசூல் வேட்டையாடி வரும் இந்த படம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை என பலரும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியன் செல்வன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

அதில் அவர், இத்திரைப்படத்தில் வந்தியத்தேவனாக பெற்ற அனுபவங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை, கல்கிக்கு எனது முதல் வணக்கமும் நன்றியும் எனக்கூறி மணிரத்தினம் உள்பட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.