சொந்த செலவில் 25க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கலையரங்கம் வகுப்பறைகள் கட்டி அசத்திய பிடி செல்வகுமாருக்கு பாராட்டு விழா..!

பிடி செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்திய திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் அவர்கள் கலப்பை மக்கள் இயக்க தலைவர், தென்குமரி கல்விக்கழக செயலாளராகவும் இருந்து வருகிறார். இதுவரை இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு கலையரங்கங்கள், வகுப்பறைகள் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் கலையரங்கங்களை தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகம் மட்டுமின்றி, தமிழகத்தில் இதுபோன்ற செயல்களை யாரும் செய்ததில்லை. குறிப்பாக வெள்ளாளன்விளை, பொட்டல்விளை, பறக்கை, மணக்குடி, இலந்தையடிவிளை, கோவளம் உள்ளிட்ட ஊர்களில் கலையரங்கங்கள், லீபுரம், ஆரோக்கியபுரம், தென்தாமரைகுளம், வாரியூர், மாடன்பிள்ளை தர்மம், மயிலாடி உள்ளிட்ட பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கலையரங்கங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த சாதனை செய்து அசத்திய பி.டி.செல்வகுமாருக்கு திரையுலகம் சார்பில் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இதில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு தலைமையிலும், இயக்குனர் திரு கே. பாக்கியராஜ் முன்னிலையில் மற்றும் பல இயக்குனர் மற்றும் திரைப்பட நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை நடிகை தேவயானி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு பி கே சேகர்பாபு அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த நிகழ்ச்சி பரணி ஸ்டுடியோ வடபழனியில் 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

