உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ரன்வீர்சிங் பதிவு..

Web Ads

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார்.

மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘காந்தாரா’ படத்தில் வரும் காட்சிகள் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் துளு மக்களின் கலாச்சாரம் மற்றும் தெய்வ வழிபாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

அப்படிப்பட்ட புனிதமான தெய்வத்தை ரன்வீர் சிங் கேலி செய்யும் விதமாக பாவனை செய்ததாகவும், அதனை ‘பேய்’ என்று தவறாக அழைத்ததாகவும் துளு அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த ரிஷப் ஷெட்டி அதைத் தடுக்காமல் சிரித்ததற்கும் கண்டனங்கள் எழுந்தன.

துளு சமுதாய தலைவர்கள், ரன்வீர் சிங் மற்றும் ரிஷப் ஷெட்டி இருவரும் கத்ரி மஞ்சுநாதா கோயிலுக்கு வந்து தெய்வ சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். சமூக வலைதளங்களிலும் ரன்வீருக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்தன.

இதனையடுத்து, ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், ‘ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், சம்பிரதாயத்தையும் மதிப்பவன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ranveer singh apologises for mimicking rishab shetty kantara act
ranveer singh apologises for mimicking rishab shetty kantara act