ஒருவார கால ஆன்மீகப் பயணம்: இமயமலை நோக்கி ரஜினிகாந்த்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை நோக்கி ஆன்மீகம் பயணம் மேற்கொள்வது தெரிந்ததே. அவ்வகையில், அவரது தற்போதைய பயணம் பார்ப்போம்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியானது. இதையடுத்து அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார்.’கூலி’ படம் வெளியாகும் முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததால், அங்கு செல்லவில்லை.
இந்நிலையில் தற்போது ஒருவார கால பயணமாக இமயமலை சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற அவர், ரிஷிகேஷ் சென்று சேர்ந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
ஆன்மீகப் பயணம் குறித்து, முன்னதாக ரஜினி பாடிய ஒரு பாடல் ‘ கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல’ என்ற வரிகள் நினைவுகூரத்தக்கது.
