4-வது முறையாக லோகேஷ்-அனிருத் கூட்டணி: இதோ, நெகிழ்ச்சியான உரையாடல்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸாகிறது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மோனிகா பாடல் வேற லெவல்.
ஆனால், ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ ஆகிய படங்களில் லோகேஷ் கனகராஜ் பாடல்களே வைக்கவில்லை. ‘மாநகரம்’ படத்தில் மட்டும் ஒரு மான்டேஜ் பாடல் ஒன்றை வைத்திருப்பார் அவ்வளவுதான். மற்றபடி, முதல் இரண்டு படங்களில் லோகேஷ் கனகராஜ் பாடல்கள் வைக்கவில்லை.
முதல்முறையாக தான் இயக்கும் மூன்றாவது படமான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தான், விஜய் ரசிகர்களுக்காக பாடல்கள் வைத்தார். இந்த படத்தில்தான் அனிருத்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தார் லோகேஷ். பிறகு விக்ரம், லியோ, கூலி என இவர்களது பயணம் வெற்றிகரமாக தொடர்கிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என நான்கு படங்களிலும் அனைத்து பாடல்களும் ரீச்சாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ‘கூலி’ படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே ஒரு பதிவின் மூலம் நன்றிகளை தெரிவித்து வருகின்றார்.
அவ்வகையில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனுக்கு தன் நன்றியினை தெரிவித்துள்ளார் லோகேஷ். ‘நம் பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து வருகின்றது, ‘கூலி’ நம்முடைய கூட்டணியில் வெளியாகும் நான்காவது படமாகும். ஒவ்வொரு முறையும் நாம் இணையும்போது அந்த படைப்பு, தரமாக உருவாகியிருக்கிறது. அனைத்திற்கும் நன்றி, லவ் யு’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கின்றார்.
அதேபோல் அனிருத்தும், ‘எங்கு துவங்கி தற்போது எங்கு இருக்கின்றோம்’ என எமோஷனலாகவும் பெருமிதமாகவும் பதிவிட்டு இருக்கின்றார்.
