பலர் என்னைப் பைத்தியம் என்கின்றனர்: ‘ராமாயணம்’ படத் தயாரிப்பாளர் பேச்சு..

நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். படத்தின் இரு பாகங்களுக்கும் ரூ.1600 கோடி பட்ஜெட் என முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது நமித் மல்ஹோத்ரா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
‘ராமாயணம்’ படத்தின் இரு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.4000 கோடிக்கும் மேல் செலவாகும். இதைக்கேட்டு, பலர் என்னைப் பைத்தியம் என்கின்றனர். எந்தவொரு இந்தியப் படத்தின் பட்ஜெட்டும் ‘ராமாயணம்’ படத்தின் பட்ஜெட்டுக்கு அருகில்கூட இல்லை. இது ஒரு மகா காவியம் என்பதால், ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.
ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, இது ஒன்றுமே இல்லை. உலகின் மிகச்சிறந்த மகா காவியத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்க வேண்டும் என்பதே படக்குழுவின் விருப்பம்’ என கூறினார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி இப்படத்துக்காக விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இருவரும் இசையமைக்கின்றனர். உலகளவில் படத்தை விநியோகிக்க ஹாலிவுட் ஸ்டுடியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
படத்தில் லட்சுமணனாக ரவி துபே, அனுமனாக சன்னி தியோல், ராவணனாக யஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், அருண் கோவில், லாரா தத்தா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், இந்திரா கிருஷ்ணன், ஷிபா சத்தா, மோஹித் ரெய்னா, குணால் கபூர், விவேக் ஓபராய், ஷோபனா, அமிதாப் பச்சன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
