‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: கோர்ட் தீர்ப்பு

இளையராஜா போட்ட ஒரு மெட்டை, அவரது மகன் யுவன் ரீகிரியேட் செய்து வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்த முழு விவரம் பார்ப்போம்..
தமிழ் சினிமாவில், ‘அன்னக்கிளி’ படம் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசையால் ரசிகர்கள் மனதில் நிறைந்திருப்பவர் ‘இசைஞானி’ இளையராஜா.
இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இவர் இசையமைத்த, ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை பயன்படுத்துவதற்காகவும், வழக்கு தொடர்ந்தார். அதேபோல் மற்ற சில படங்களில் பாடல்களை பயன்படுத்தியதற்காகவும் தன் எதிர்ப்பை இளையராஜா, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி வெளிப்படுத்தி உள்ளார்.
இளையராஜாவின் இந்த செயலை விமர்சிக்கும் விதமாக பல தயாரிப்பாளர்கள் தங்களின் எதிர்ப்பையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஒரு படத்தில் இசையமைக்க இளையராஜா பணம் வாங்கிவிட்டால், அந்த பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தமே தவிர, இளையராஜாவுக்கு சொந்தமில்லை என கூறி வந்தனர். வைரமுத்துவும் பல முறை விமர்சித்து வந்தார்.
இச்சூழலில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் திரைக்கு வந்த ‘அகத்தியா’ படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் இளையராஜாவின் அனுமதியோடு அவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா, இளையராஜாவின் இசையில் ‘மூடு பனி’ படத்தில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடலை ரீ-கிரியேட் செய்து பயன்படுத்தி இருந்தார். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்தப் பாடலின் காப்புரிமை இளையராஜாவுக்கு சொந்தமானது அல்ல என சரிகமா நிறுவனம் டெல்லியில் வழக்கு தொடர்ந்தது.
இது குறித்த வழக்கு நடந்து வந்த நிலையில், இதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ‘சரிகமப’ நிறுவனம் உரிய ஆதாரங்களை முன்வைத்த நிலையில், ‘இளையராஜாவுக்கு இந்த பாடலை பயன்படுத்த எந்த உரிமையும் இல்லை’ என டெல்லி ஹை கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
