தீபிகா படுகோன் கருத்துக்கு, நவாஸுதின் சித்திக் வரவேற்பு?

பாலிவுட் சினிமாவில் நடிகை தீபிகா படுகோன் ‘தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும்’ என கூறியது தொடர்பாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார், நவாஸுதின் சித்திக். அவர் நடித்த ‘தம்மா’ திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது.
‘எனக்கு அதைப் பற்றி (தீபிகா சொன்னது பற்றி) அதிகம் தெரியாது. அந்தக் கருத்தை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால், எது சவுகரியமாக வேலை நேரமாக இருக்கிறதோ. அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அது உங்களை சோர்வாக்காமல், எளிதில் வேலைகளை முடித்துக் கொடுக்கும்படி இருக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
இது மறைமுகமாக ஆண்-பெண் நடிகர்களுக்கு சமமான 8 மணி நேர வேலை என்ற தீபிகாவின் கோரிக்கையை ஆமோதிப்பது போலவே உள்ளது.
முன்னதாக ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை உருவாக்கின.
‘தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும்’ என தீபிகா கூறியதே இதற்கு காரணம் என பலரும் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக, தீபிகா படுகோன் முன்னதாக தெரிவித்தபோது, ‘இந்திய திரையுலகில் பல்வேறு முன்னணி ஆண் நடிகர்கள் பல வருடங்களாக தினமும் 8 மணி நேரம் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்கள். அதெல்லாம் தலைப்பு செய்தியாகவில்லை. ஆனால், நான் சொன்னால் மட்டும் பெரிய செய்தியாகி விடுகிறது. ஏன் என்று தெரியவில்லை.
சில ஆண் நடிகர்கள் வார நாட்களில் மட்டுமே நடிப்பார்கள், வார இறுதி நாட்களில் படப்பிடிப்புக்கு வரமாட்டார்கள். இந்திய திரையுலகில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை என்னவென்றால், இது ஒழுங்கற்ற திரையுலகமாகும். இதனை கட்டமைக்க வேண்டும். சமீபத்தில் குழந்தை பெற்ற சில நடிகைகள் கூட 8 மணி நேரம் தான் பணிபுரிகிறார்கள். அதுவுமே தலைப்பு செய்தியாகவில்லை.
எனது வாழ்க்கை முழுவதும் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். எப்போதும் அமைதியாக என் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
