vijayakanth House Land For Auction :
சென்னை: ரூ.5.52 கோடி ரூபாய் கடன் பாக்கி காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஏலத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தி வெளியானது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே மாமண்டூர் பகுதியில், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி உள்ளது.
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரி மற்றும் கல்லூரிக்கு தேவையான நிலங்கள், ஸ்ரீ ஆண்டாள் அழகர் எஜுகேஷனல் டிரஸ்ட் மூலம் வாங்கப்பட்டுள்ளது.
இந்த டிரஸ்ட்டின் உரிமையாளர்களாக விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இணைந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்லூரியின் இடங்களை அடகு வைத்து ரூ.5 கோடியே 52 லட்சத்து, 73 ஆயிரத்து 825 ரூபாய் கடனாக வாங்கியுள்ளனர்.
அவ்வாறு வாங்கிய கடனுக்கு, இதுவரை அசல் மற்றும் வட்டியை அவர்கள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வங்கி சட்டத்தின்படி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவிற்கு சொந்தமான சொத்துக்களை வரும் ஜூலை மாதம் 26- ஆம் தேதி அன்று ஏலம் விட இருப்பதாக வங்கி, நாளிதழ் மூலம் தங்களது தகவலை வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, மாமண்டூரில் அமைந்துள்ள கல்லூரிக்கு சொந்தமான, 25 ஏக்கர் நிலத்தை ரூ.92 கோடியே 5 லட்சத்து 5 ஆயிரத்து 51 ரூபாய்க்கும்,
மத்திய அரசை எதிர்த்து போராட்டம்: தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்!
சாலிகிராமம் காவேரி தெரு மற்றும் வேதவள்ளி தெருவில் உள்ள 4651 சதுர அடி மற்றும் 10271 சதுர அடி வணிக வளாகத்தை ரூ.4 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 849 ரூபாய்க்கும் ஏலத்தில் விட குறைந்தபட்ச கேட்பு விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, விஜயகாந்த் அவர்கள் குடியிருக்கும் சாலிகிராமம் கண்ணபிரான் காலனியில் அமைந்துள்ள 3013 சதுர அடி வீட்டை ரூ.3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரத்து 344 ரூபாய்க்கு ஏலம் விடுவதாகவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.
மொத்தமாக ரூ.100 கோடி அளவுக்கு ஏல தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்த்தின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருப்பது திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்செய்தி திரையுலகத்தில் அனைவருக்கும் கவலையை அளித்துள்ளது.,