Tasmac Employees Strike – விழுப்புரம்: தமிழகம் முழுவதும் வரும் 8,9 ஆம் தேதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த தொமுச மாநிலத் தலைவர் ராஜவேல் கூறுகையில், ‘வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொமுச உட்பட 11 சங்கங்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளோம்.
மொத்தம் 27,000 ஊழியர்கள் பங்கேற்க உள்ள இந்த போராட்டத்தால் , தமிழகம் முழுவதும் உள்ள 6,000 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் ‘ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை தாங்கள் அறிவித்துள்ளதாகவும் கூறினார்” .
மேலும் மத்திய அரசு பின்பற்றும் கொள்கைகளினால், டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்.
இதனால் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள் என கடந்த பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்றும் கூறினர்.
இதன் காரணமாக, வரும் ஜனவரி 8,9 ஆகிய தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களும் பங்கேற்பது என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
எனவே வரும் 8,9 தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக டாஸ்மாக் ஊழியர்கள் இன்று உறுதிபட அறிவித்துள்ளனர்.
மேலும் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் கடந்த டிசம்.21 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநரை சந்தித்து வேலைநிறுத்த அறிக்கை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.