Sultan Azlan Shah Cup Hockey – சுல்தான் அஷ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பெற்றது. மலேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மலேசியாவில் உள்ள இபோ நகரில், ஆண்களுக்கான 28வது சுல்தான் அஷ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது.
இதில் கனடா, போலந்து, இந்தியா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா என, 6 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் மலேசியாவை சந்தித்தது. துவக்கம் முதலே இந்திய அணியின் அசத்தினர்.
17வது நிமிடத்தில் சுமித் முதல் கோல் அடித்தார். இதற்கு சொந்த மண்ணில் களமிறங்கிய மலேசியா அடுத்த 4வது நிமிடத்தில் (21) பதிலடி தந்தது.
‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் அப்துல் ரகிம் கோலாக்கினார். இதன் பின் இந்திய அணி எழுச்சி பெற்றது. 27வது நிமிடத்தில் சுமித் குமார் கைகொடுக்க, இந்தியாவின் கோல் எண்ணிக்கை இரட்டிப்பானது.
மீண்டும் அதிர்ஷ்டம் தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருந்த இந்திய வீரர்களுக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடித்தது. ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் வருண் குமார் (36வது நிமிடம்) கச்சிதமாக கோல் அடிக்க, இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்றது.
உள்ளூர் ரசிகர்கள் முன் சளைக்காமல் போராடிய மலேசிய அணிக்கு முகமது பிர்கான் (57) கைகொடுத்தார். இந்த மகிழ்ச்சியில் தற்காப்பு வீரர்கள் கோட்டைவிட, இதை இந்திய அணி பயன்படுத்திக்கொண்டது. அடுத்த நிமிடத்தில் (58) மன்தீப் சிங் கோல் அடித்தார். முடிவில், இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் ஜப்பானை (2-0) வீழ்த்திய இந்திய அணி, தென் கொரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியை (1-1) ‘டிரா’ செய்தது.
தற்போது வென்றதன் மூலம், புள்ளிப்பட்டியலில் 7 புள்ளியுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கோல் வித்தியாசத்தில் தென் கொரியா ‘நம்பர்-1’ இடம் வகிக்கிறது. இந்தியா தனது நான்காவது போட்டியில் இன்று கனடாவை எதிர் கொள்கிறது.