நடிகர் ரஜினிகாந்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீரென்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவர் தற்பொழுது இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகும் ‘ஜவான்’ திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இவர்களுடன் தீபிகா படுகோனே, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் ஷாருக்கான் படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஷாருக்கான் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதே ஸ்டுடியோவில் நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைபடத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீரென்று நேரில் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பிற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த சந்திப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த தகவல் இணையத்திலும் வைரலாகி வருகிறது.