சென்சார் போர்டு குறித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் கருத்து..

பெரிய வரவேற்பு பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள ‘வித் லவ்’ படம் வரும் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஷன் ஜீவிந்தின் உதவி இயக்குநரான மதன் இயக்கியுள்ளார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ஒரு தயாரிப்பாளராக இருக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவிக்கையில், ‘சென்சார் போர்டு என்பது இப்போது புதிதாக வந்தது கிடையாது. காலம் காலமாக உள்ளது. என்னை பொறுத்தவரையில் சென்சார் போர்டை மதிக்க வேண்டும். அதைத் தாண்டி அது பற்றிய கருத்து ஏதும் கூற விரும்பவில்லை’ என்றார்.
குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை தயாரித்த மகேஷ் தயாரிப்பில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள ‘வித் லவ்’ படமும் ஆங்கில தலைப்பில் உள்ள நிலையில், அந்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் மகேஷ், இந்த படத்துக்கு விஜய் நடித்த ‘ப்ரியமுடன்’ தலைப்பு தான் கேட்டோம். ஆனால், அது கிடைக்கவில்லை. அதனால், இந்த டைட்டில்’ என்றார்.
இச்சூழலில், இளம் இயக்குநர்களுக்கு சொந்தமாக தமிழ் தலைப்பு கூட உருவாக்க முடியவில்லையா? என்கிற கேள்வியும் பான் இந்தியா பிசினஸ் மற்றும் தமிழ், தெலுங்கு மார்க்கெட்டை முன்னிறுத்தி ஆங்கில தலைப்புகள் அதிகரித்து வருகிறதா? என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழ் மொழி போற்றும் ‘பராசக்தி’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
