நடிகை சாய் பல்லவியின் சமீபத்திய பேட்டியை பார்த்து நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாளத் திரைப்படமான பிரேமம் படத்தின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக கலக்கி வருகிறார்.

தற்போது தனது நடனத்தாலும், நடிப்பாலும் தெலுங்கு திரை உலகில் பிஸியாக இருந்து வரும் சாய்பல்லவி தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அப்டேட்டை படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி சிம்ரன் குறித்து அளித்திருக்கும் பேட்டியின் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர், தான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, சிம்ரனின் படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அப்போது தான் நடிகையானால், சிம்ரனை போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். சாய் பல்லவியின் இந்த பேட்டியை பார்த்த சிம்ரன், நெகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.