நான் கர்ப்பமாக இருந்தபோது ஒரு தயாரிப்பாளர் மோசமாக நடந்துகொண்டார்: ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு..

நடிகை ராதிகா ஆப்தே 2012-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார். முன்னதாக,2011-ல் லண்டனில் இருந்தபோது இருவரும் சந்தித்தனர். அந்த அறிமுகம் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. கடந்த ஆண்டு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் ‘தான் கர்ப்பமாக இருந்தபோது தயாரிப்பாளரிடமிருந்து ஆடம்பர வசதிகள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், கொஞ்சம் அனுதாபம் மட்டுமே எதிர்பார்த்ததாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
ராதிகா கடைசியாக ‘சிஸ்டர் மிட்நைட்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் 2025 மே 30 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. தற்போது அவர் ‘லாஸ்ட் டேஸ்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடிக்கிறார். கிறிஸ்தவ மிஷனரி ஜான் ஆலன் சௌவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஜஸ்டின் லின் இயக்குகிறார்.
இந்நிலையில், தற்போது ‘ஃப்ரீடம் டு ஃபீட்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதிகா, இந்திய பொழுதுபோக்கு துறையில் தாய்மையடைய விரும்பும் பெண்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மற்றும் அவமானங்கள் குறித்து தெரிவிக்கையில்,
‘அந்த தயாரிப்பாளர் நான் கர்ப்பமாக இருந்ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. என் உடல் மாற்றங்களையும், அசௌகரியங்களையும் பொருட்படுத்தாமல், படப்பிடிப்பில் இறுக்கமான உடைகளை அணியச் சொன்னார். வலியால் அவதிப்பட்டபோதும் மருத்துவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அந்த நேரத்தில் நான் மிகவும் வேதனைப்பட்டேன்.
கர்ப்ப காலத்தில் நான் எடுத்துக்கொண்ட உணவின் காரணமாக என் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. என் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக்கூட அந்த தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லை, ஒரு ஹாலிவுட் படத்தில் பணிபுரிந்தபோது, அந்த ஹாலிவுட் இயக்குநர் மிகவும் ஆதரவாக இருந்தார்.
நான் அதிகமாக சாப்பிடுவதாகச் சொன்னபோது, ‘இந்த படத்தின் இறுதியில் நீங்கள் வேறு ஒரு நபராகத் தெரிந்தாலும் பரவாயில்லை, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அந்த மனிதாபிமானமும், அனுதாபமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன’ என ராதிகா பகிரங்கமாக கூறியுள்ள நிகழ்வு தற்போது வைரலாக பரவுகிறது.
