இப்படி கேவலப் பிறவியாக வாழணுமா?: பார்த்திபன் சூடான கேள்வி..

பார்த்திபன் தற்போது ‘நான் தான் சிஎம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில்,
பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று ஷார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று சோக கீதத்துடன் வெளியான அந்த ஷார்ட்ஸை 11 ஆயிரம் பேர் லைக் செய்தது தான் வேதனை. 400-க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
அந்த செய்தி பார்த்திபனுக்கு தெரியவர யூடியூப் சேனல் லிங்க்கை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, தான் நலமாக இருப்பதாக தன் ஸ்டைலில் தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்கள் இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் வருவது மரணம் அடைய வேண்டும் என்று கூறியிருக்கிறார் பார்த்திபன். தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் கூட, இப்படி கேவலப் பிறவியாக வாழணுமா என்று நறுக்கென்று கேள்வி கேட்டிருக்கிறார்.
திரையுலகினர் உயிருடன் இருக்க அவர்களின் இறப்பு செய்தி வெளியிடும் ஆட்கள் திருந்த சுடுகாட்டு சுடலை சாமி அல்ல, ஆறாவது அறிவு தான் உதவி செய்ய வேண்டும் என்று ட்வீட் செய்திருக்கிறார் பார்த்திபன். மேலும், தான் கம்பீரமாக சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
பார்த்திபனின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, அந்த வீடியோவில் வந்தது உண்மையா இல்லையா என்பதை கூட சரிபார்க்காமல் 11 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்திருக்கிறார்கள். என்ன மாதிரி ஆட்கள் அவர்கள் எல்லாம். உங்களை பற்றி தவறான செய்தி வெளியிட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் பார்த்திபன் சார். பொய் தகவலை பரப்பும் முட்டாள்கள் அவர்கள் என தெரிவித்துள்ளனர். ஒரு சிலரோ சென்னை போலீஸை டேக் செய்து அந்த யூடியூப் சேனல் ஆட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
முன்னதாக, தனுஷ் இயக்கியிருக்கும் ‘இட்லி கடை’ படத்தில் ஆர்.அறிவு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பார்த்திபன். அவரே சும்மா வார்த்தைகளில் விளையாடுவார். இந்நிலையில், அவரின் கதாபாத்திர பெயரிலேயே விளையாடியிருக்கிறார் தனுஷ்.
பார்த்திபன், தனுஷ் காம்போவை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இட்லி கடையில் தான் ஒரு மினி இட்லியான சந்தோஷத்தில் இருக்கிறார் பார்த்திபன். இட்லி கடை படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார் தனுஷ். அவருடன் சேர்ந்து படத்தை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் பார்த்திபன். அப்படி இருக்கும்போது அவரைப் பற்றி போய் இப்படி பொய்யான செய்தி வெளியிட்டுள்ளனர்.
