“இரவின் நிழல்” திரைப்படம் OTT தளத்தில் சொன்னபடி வெளியாகாததால் இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல் என பார்த்திபன் பல்வேறு பேட்டிகளில் கூறி இருந்தார்.

இதனால் அதிக ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற தகவலை நடிகர் பார்த்திபன் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் கூறியபடி அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படம் நினைத்த நாளில் வரவில்லை என்னை மன்னிக்கவும், மீண்டும் ஒரு முறை படம் எப்போது வரும் என்பதை உறுதி செய்து உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று ரசிகர்களுக்கு பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார்.