ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக, நடிகை நவ்யா நாயருக்கு லட்சம் ரூபாய் அபராதம்..
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில், கடந்த 6-ம் தேதி மெல்போர்ன் நகரில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கேரள நடிகை நவ்யா நாயர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இவ்விழாவில் பங்கேற்க ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவர் ஒரு முழம் மல்லிகை பூவை கைப்பையில் எடுத்துச் சென்றார். மெல்போர்ன் விமான நிலையத்தில் நவ்யாவின் உடைமைகளை அந்த நாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவரது கைப்பையில் ஒரு முழம் மல்லிகை பூ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நவ்யா நாயர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
‘எனது அப்பா, இரண்டு முழம் மல்லிகை பூவை வாங்கினார். அந்த பூவை இரு துண்டுகளாக வெட்டி என்னிடம் தந்தார். நான் கொச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மெல்போர்ன் சென்றேன். எனவே சிங்கப்பூர் செல்லும் வழியில் ஒரு முழம் பூவை சூடிக் கொண்டேன்.
மெல்போர்ன் விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது மல்லிகை பூவை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த நாட்டு சட்ட விதிகளின்படி மல்லிகை பூவை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே எனக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை 28 நாட்களுக்குள் செலுத்த காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
