ஜெய்லர் திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ஜெய்லர். நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படம் குறித்து நடிகர் ரஜினிக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நூதன கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், “ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பாருங்கள் என்று பேசினார். அது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.