ரஜினியின் லால் சலாம் திரைப்படத்திலிருந்து கருத்து வேறுபாடு காரணத்தால் விலகிய பிரபலம் வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனரும் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா பணியாற்றுவார் என்று அண்மையில் படக்குழு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென்று லால் சலாம் திரைப்படத்திலிருந்து தான் விலகி உள்ளதாக பூர்ணிமா தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார். அதில் அவர், முதற்கட்ட பணிகளின் போது கருத்து வேறுபாடு காரணமாக நான் ‘லால் சலாம்’ படத்தில் இனி பணிபுரிய போவதில்லை. இனி வரும் போஸ்டர்களில் இருந்து என் பெயரை நீக்கி விடுங்கள் என்று பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார். இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நெருங்கிய சிநேகிதியான இவர் கருத்து வேறுபாடு காரணத்தால் படத்திலிருந்து வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.