தீபிகா படுகோன்- ராஷ்மிகா இருவர் சொல்வதும் சிறப்பு: கீர்த்தி சுரேஷ் ஆதரவு..

திரைப்படத் துறையில் ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலை என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்கின்றனர். ஏனெனில் படத்தின் பட்ஜெட், கோடிகளில் சம்பளம், கால்ஷீட் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனின் 8 மணி நேர வேலை கோரிக்கை பலரையும் கவர்ந்துள்ளது. ராஷ்மிகா மந்தனாவுக்குப் பிறகு, இப்போது கீர்த்தி சுரேஷும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, 8 மணி நேர வேலை மாற்றம் பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்று ராஷ்மிகா கூறியிருந்தார், இப்போது கீர்த்தியும் அதே கருத்தையே கூறியிருக்கிறார். கீர்த்தி தெரிவிக்கையில்,
‘நாங்கள் வேலையை முடித்து வீடு திரும்ப இரவு 10 மணி ஆகிறது. தொழில்நுட்ப குழுவினர் எங்களை விட மிகவும் முன்னதாகவே செட்டுக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வேலை செய்கிறார்கள். இதனால், நல்ல ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் சவாலாகி விடுகிறது.
எல்லோருக்கும் எட்டு மணிநேர தூக்கம் தேவை. இது 9-6 ஷிப்டில் உள்ளது. ஆனால், நடிகர்களுக்கு அது அரிது. தொழில்நுட்ப குழுவினர் சில நேரங்களில் நான்கு மணிநேரம் கூட தூங்குவதில்லை’ என்றார். சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தற்போது திருமண வாழ்க்கை மற்றும் நடிப்பு வாழ்க்கை என இரண்டையும் சமநிலைப்படுத்தி வருகிறார்.

