மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்து வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரமை நடித்த ‘பைசன்’ படம் நாளை 17-ந்தேதி வெளியாகிறது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இந்நிலையில், பைசன் படத்திற்கு ஆங்கில டைட்டில் வைத்தது ஏன் என்பது தொடர்பாக மாரி செல்வராஜ் தெரிவிக்கையில், ‘படத்திற்கு ‘பைசன்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டைக் கடந்து படத்தை கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது.
என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் ‘காளமாடன்’ என்றுதான் உள்ளது’ என கூறியுள்ளார். முன்னதாக ‘பைசன்’ படம் பார்த்துவிட்டு இயக்குநர் ராம் ‘தலைசிறந்த படைப்பு’ என பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
