Girl paid for the candidate : ஈரோடு: தேர்தல் பிரசாரத்தின் போது ஈரோடு திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண் ஒருவர் வேட்பாளர் கணேசமூர்த்திக்கு தேர்தல் செலவுக்கு 100 ரூபாய் வழங்கிய சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் கணேசமூர்த்தி வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். வேட்பாளர் கணேசமூர்த்தியுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
அப்போது,அங்கு ஒரு பகுதியை சேர்ந்த பெண்கள் வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் மூதாட்டி ஒருவர் கணேசமூர்த்திக்கு ஆரத்தி எடுத்து விட்டு, மாலை அணிவித்து பிறகு 100 ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினார்.
இதை பார்த்து கணேசமூர்த்தி மற்றும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதிர்ந்து போன கணேசமூர்த்தி எதுக்குமா எனக்கு பணம்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்மணி கூறிய பதில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது..
அந்த பெண்மணி ‘இந்த 100 ரூபாயை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.
இதை கேட்டு நெகிழ்ந்து போன வேட்பாளர் கணேசமூர்த்தி “பணமெல்லாம் வேண்டாம் அம்மா, உங்களுக்கு பழக்கமானவங்க, தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி உதயசூரியனுக்கு ஓட்டு போட சொல்லுங்க!” என்று கூறிச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.,