Colombo Terror Attack :
கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் உலகையே உலுக்கியுள்ள நிலையில், இன்று அந்நாட்டு நாடாளுமன்றம் அவசரமாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடி கொண்டிருந்தபோது, தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.
அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் தொடர் குண்டு வெடிப்புக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள்.
மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் உலகெங்கும் வாழும் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் படுகாயம் அடைந்த மக்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கொழும்பு நகரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கையில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் நாட்டை உலுக்கிய இந்த தொடர் குண்டு வெடிப்பு பற்றி ஆலோசிக்க அதிபர் சிறிசேனா தலைமையில் நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதில், இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசிக்க அவசரமாக கூடுகிறது.
மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.,