எனக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டார் விக்ரம்: காதல் மனைவி சைலஜா பெருமிதம்
சீயான் விக்ரம் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், அவரை காதலித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார் சைலஜா. இது குறித்த நிகழ்வுகள் பார்ப்போம்..
விக்ரம் நடித்த ‘வீர தீர ‘சூரன்-2’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இச்சூழலில், விக்ரம் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக விக்ரம், கேரளாவை சேர்ந்த சைலஜா பாலகிருஷ்ணனை காதலித்து கடந்த 1992-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவர்களின் திருமணம் நடந்தது. அவர்களுக்கு அக்சிதா என்கிற மகளும், துருவ் என்கிற மகனும் உள்ளனர் என்பது தெரிந்ததே. அக்சிதாவுக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது.
இந்நிலையில், காதலித்த காலத்தில் நிகழ்ந்தது குறித்து சைலஜா நினைவுகூர்ந்து தெரிவிக்கையில்,
‘விக்ரம் யு.ஜி. முடித்து பி.ஜி.க்கு விண்ணப்பித்த நாள் எனக்கு போன் செய்தார். ஒரு டீக்கடையில் இருந்து போன் செய்து, நான் உனக்கு ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை போன் செய்து பேசலாமா என கேட்டார்.
இரண்டாவது முறை போன் செய்தபோது , நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன். நீ ஒரு இந்து. உனக்கு தாலி மீது நம்பிக்கை இருக்கா என கேட்டார். எனக்கு தாலி மீது நம்பிக்கை இல்லை என்றேன். எனக்கும் இல்லை. நாம் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்றார். அதன் பிறகு மீண்டும் போன் செய்து, கொஞ்ச காலம் நான் சம்பாதிக்க மாட்டேன். ஆனால், ஒரு நாள் நான் உன்னை இந்த உலகின் சிறந்த இடங்களுக்கு வெகேஷனுக்கு அழைத்துச் செல்வேன் என்றார் என சைலஜா தெரிவித்தார்.
காதலித்த காலத்தில் சைலஜாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டார் விக்ரம். தன் காதல் மனைவியை பல நாடுகளுக்கு வெகேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். திரைப் பயணத்தில் விக்ரம் போராடியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.