பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபெளசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபாஸ் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள விஷயங்களை வைத்து எழுந்துள்ள பல கேள்விகளுக்கு இயக்குநர் ஹனு ராகவபுடி பதில் தெரிவிக்கையில்,
‘திட்டமிட்டுதான் சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தினோம். போர்வீரனைப் பற்றிய இந்தக் கதைக்கு அவை ஆழமான பொருள் தருகிறது மற்றபடி, இது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் அல்ல. பகவத்கீதையிலிருந்து எடுத்துக் கொண்டது, வெறும் தத்துவ ரீதியான ஊக்கம் மட்டுமே.
ஃபௌசி என்பது மனித உணர்வுகள், தேசப்பற்று மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சமூக-அரசியல் பதற்றங்களை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான அதிரடி கதையாகும். இன்றும் உலகளவில் அதேபோல் எதிரொலிக்கும் உண்மைகளை இப்படம் பேசும்.
ஃபௌசியில் பிரபாஸ் ஒரு மிகப்பெரிய வீரராக நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் குணாதிசயத்தில் புராண வீரர்களின் சிறப்புகளை கலந்து காட்ட விரும்பினேன். அர்ஜுனன், கர்ணன், ஏகலைவன் ஆகியோர் திறமை, தியாகம், பக்தி என சக்திவாய்ந்த பரிமாணங்களைக் குறிக்கிறார்கள். அதை டைட்டில் பயன்படுத்தினேன்.
பாண்டவர்களுடன் கர்ணன் சேர்ந்திருந்தால் மகாபாரதப் போர் எப்படி மாறியிருக்கும்? என்ற சிந்தனைதான் இந்தக் கதையின் மையக் கரு. இப்போதைக்கு கதை பற்றி அதிகமாக சொல்ல முடியாது. ஆனால், இப்படம் 1940-களின் காலனித்துவ பின்னணியில் நடக்கும் அதிரடி கதையாக இருக்கும்’ என கூறியுள்ளார்.
