நாளை ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: விஜய் மலேசியா பயணம்..

விஜய் தனது கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இவரது இசையில் வெளியான ‘தளபதி கச்சேரி’ மற்றும் ‘ஒரு பேரே வரலாறு’ சிங்கிள்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் குரலில் ‘செல்ல மகளே’ பாடலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் நாளை 27-ந்தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ‘இந்த நிகழ்ச்சியில் யாரும் அரசியல் பேசக் கூடாது; சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும்’ என மலேசிய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இந்நிலையில், நாளை கோலாகலமாக நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க விஜய் சென்னை விமானத்திற்கு வந்து தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டார். இந்த விழாவில் பங்கேற்க விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் ஏற்கனவே மலேசியா சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகியோரும் விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

