சோசியல் மீடியா மூலம் போட்டியாளராக நுழைந்து சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் டைட்டிலை வென்றுள்ளார் கில்மிஷா.

தமிழ் சின்னத்திரையில் இசை துறைக்கான ரியாலிட்டி சோ என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஜீ தமிழின் சரிகமப நிகழ்ச்சி தான். 

ஜூனியர், சீனியர் என இருவருக்கும் தனித்தனியாக ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்னர் மிகக் கோலாகலமாக தொடங்கிய சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று மிகப் பிரமாண்டமாக கிராண்ட் பைனலை நிறைவு செய்தது. 

நேரு ஸ்டேடியத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் ரிக்ஷிதா, கில்மிஷா, ருத்ரேஷ் , சஞ்சனா, கனிஷ்கர், நிஷாந்த் கவின் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டனர். 

மக்கள் தேர்வு செய்த பாடல் மற்றும் சேலஞ்ச் ரவுண்டு என இரண்டு சுற்றுகளுடன் ஒளிபரப்பான கிராண்ட் பைனலில் இறுதியாக மக்களின் ஓட்டுக்கள் மற்றும் நடுவர்களின் மதிப்பெண் அடிப்படையில் டைட்டிலை வென்றார் இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழ் பெண்ணான கில்மிஷா. 

இவருடைய வெற்றிப் பயணம் எப்படி சாத்தியமானது? கில்மிஷா சரிகமப நிகழ்ச்சிக்குள் வந்தது எப்படி? என்ற சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3-க்காக போட்டியாளர்களை தேர்வு செய்ய தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடிஷன் நடத்தப்பட்டது. அது மட்டுமின்றி சோசியல் மீடியாக்கள் மூலமாகவும் தங்களது வீடியோக்களை அனுப்பி ஆடிஷனில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இலங்கையில் ஜாப்னாவில் வசித்து வந்த கில்மிஷா இந்தியாவிற்கு வந்து ஆடிஷனில் பங்கேற்க முடியாத நிலையில் சோசியல் மீடியாவில் தனது வீடியோவை அனுப்பி அதன் மூலம் தான் சரிகமப நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது. சோசியல் மீடியா மூலமாக மொத்தம் 241 பேர் ஆடிஷனில் பங்கேற்ற நிலையில் கில்மிஷா முதல் ஆளாக தேர்வாகியுள்ளார். 

சோசியல் மீடியாவை தனது வெற்றிக்கு முதல் படியாக பயன்படுத்தி சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்வாகி மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று டைட்டிலை வென்று தனது தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் வெற்றியை பதிவு செய்த முதல் ஈழத்து தமிழ் பெண்ணாகவும் கில்மிஷா இடம் பிடித்துள்ளார் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

அதே சமயம் வெறும் நேரடி ஆடிஷன் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் மூலமாகவும் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் திறமைசாலிகளை தேர்வு செய்து வெளி உலகத்திற்கு கொண்டுவர உறுதுணையாக இருந்த ஜீ தமிழுக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.