Thiruvarur bye polls cancelled – சென்னை: திருவாரூர் தொகுதியில் நடக்கவிருந்த இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும்,மறைந்த தி.மு.க. தலைவருமான கலைஞர் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கலைஞர் மரணம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழக சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இது குறித்து ஆலோசித்து வருகிறது;
இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் தற்போது காலியாக இருப்பதால்,
20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும்,
தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 10 தொகுதிகளின் தேர்தலை சிறிது காலம் தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதையடுத்து அனைத்து கட்சி வேட்பாளர்கள் தங்கள் பெயரை வேட்பாளராக திருவாரூர் தொகுதிக்கு கொடுத்தனர்.எனவே வருகிற ஜனவரி 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில்,
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் தொகுதி தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரை அவரது ரசிகர்கள் வேட்பாளர் பெயர் பட்டியலில் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.