பாலா இயக்கத்தில் உருவாகி வந்த படத்திலிருந்து விலகியுள்ளார் நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் அது நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் படத்தில் நடித்து வந்தார்.
இப்படியான நிலையில் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி இருப்பதாக இயக்குனர் பாலா அதிர்ச்சிகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில் பாலா குறிப்பிட்டு இருப்பது பின்வருமாறு
என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ படப்பணிகள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது