ஜெயிலர் படம் குறித்த கேள்விக்கு நடிகர் ஷாருக்கான் பகிர்ந்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை திரையரங்குகளில் உற்சாகத்துடன் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். தற்போது வரை வசூல் வேட்டையில் மாஸ் காட்டி வரும் ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகர் ஷாருக்கான் அளித்திருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து உரையாடி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்ப்பீர்களா? என்று எழுப்பிய கேள்விக்கு ஷாருக்கான், “கண்டிப்பாக பார்ப்பேன்.. ஐ லவ் ரஜினி சார்.. அவர் மாஸ்! அவர் ‘ஜவான்’ படப்பிடிப்பு தளத்திற்கு வந்து எங்களை ஆசிர்வதித்தார்”. என்று நெகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளார். அவரது அந்த பதிவு தற்போது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.