Sengottaiyan Request – சென்னை: 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, நாட்டுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய ஆசிரியர்கள்,
சிறந்த கல்வியை தரக்கூடிய ஆசிரியர்கள் பள்ளி பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார்.
மேலும் பொதுத்தேர்வு வரும் நேரத்தில் இதுபோன்ற தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு துறை சார்பாக அறிவுரையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.
மேலும் இந்த வேலைநிறுத்தம் நீடித்தால் மாற்று ஏற்பாடுகள் குறித்து முதல்வரோடு கலந்து பேசி அறிவிப்போம் எனவும்,
மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு மனிதநேயத்தோடு வேலைநிறுத்தத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.