நடிகர் சஞ்சய் தத் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படும் வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சஞ்சய் தத். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்து வரும் ‘கேடி – தி டெவில்’ என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் படப்பிடிப்பின் போது பயன்படுத்தப்படும் டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் சஞ்சய் தத்துக்கு பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது இது தொடர்பாக நடிகர் சஞ்சய் தத் மறுப்பு தெரிவித்து வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் கடவுளின் அருளால் நான் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். இப்போது கூட கேடி படத்தின் படப்பிடிப்பில் தான் இருக்கிறேன். என்னுடைய காட்சிகளை படமாக்கும் போது படகுழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். உங்கள் அக்கறைக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார்.