தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில், அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது. அதை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்கனவே கூறிவிட்டார்.
மேலும், ‘சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து அதற்கான பணத்தை திருப்பு கொடுக்க வேண்டும் என திரையரங்குகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் எடுத்த விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகில் இசை வெளியீட்டு விழாவில் ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் விஜய் பேசியதே இதற்கு பின்னணி என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘குடும்பத்தில் ஒரு பிரச்சனை எனில் பெற்றோரிடம் கூற வேண்டும். அதேபோல், நாட்டில் ஒரு பிரச்சனை எனில் முதல்வரிடம்தான் கூறவேண்டும். அவர்தான் எல்லோருக்கும் தந்தை போன்றவர். எங்களுக்கும் தந்தை, தாய் எல்லாமே அவர்தான். அவர் எங்களுக்கு எதிரி அல்ல’ எனக் கூறினார். இதைத் தொடர்ந்து சிறப்பு காட்சி ரத்து செய்யப்படதால்தான் சந்திரசேகர் இப்படி பேசியுள்ளார் என சமூகவலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.