ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது, விருதுகள் பெறுவதா? வசூலை அள்ளுவதா? என்றால், இரண்டும் இருந்தால் மிகச் சிறப்பு. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினியை பொறுத்தவரையில், ‘என் வழி தனி வழி’ என்ற பன்ச் டயலாக் தான் அதிரடி பதிலாய் ஒலிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், ரஜினி படம் ரிலீஸ் அன்று, தியேட்டர் பக்கம் முறுக்கு விற்கும் சாமான்யனுக்கும் ஆதாயம் தான்; சந்தோஷம் தான். சரி விஷயத்திற்கு வருவோம்..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நாளை மறுதினம் ‘வேட்டையன் ‘ படம் ரிலீஸ் ஆகின்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தினை கொண்டாட ரசிகர்கள் மிக ஆவலோடு இருக்கின்றனர். இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, யாரும் எதிர்பார்க்காத விதமாக த.செ. ஞானவேலு உடன் கூட்டணி அமைத்தார் ரஜினி. ‘ஜெய் பீம்’ படம் வாயிலாக சமூகத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்திய ஞானவேல், ரஜினியை வைத்து என்ன மாதிரியான ஜானரில் படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் எகிறியது.
இந்நிலையில், தற்போது இவர்கள் காம்போவில் ‘வேட்டையன்’ உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது டிக்கெட் முன் பதிவு பணிகள் துவங்கி, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. புக் மை ஷோவில் ‘வேட்டையன்’ படத்திற்கு, தற்போது வரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தமாக, அனைத்து தளங்களிலும் சேர்த்து 3.1 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலமாக ரூ.6.37 கோடி வசூலித்துள்ளது. இது ‘கோட்’ படத்திற்கு புக்கிங் ஆன டிக்கெட்களை விட அதிகம் என கூறப்படுகிறது. இதன் மூலமாக, வேட்டையனுக்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருவது உறுதியாகியுள்ளது.
அண்மையில் ‘வேட்டையன்’ படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகி, அமோகமான வரவேற்பினை பெற்றது. மேலும், இப்படம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், வேட்டையனுக்கு கைத்தட்டல், மூன்று கப் என எமோஜிக்களை குவித்து, தனது ஸ்டைலில் விமர்சனம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
171 கப் எமோஜி கொடுத்திருக்கலாம் அனி சார்..