Periyar statue damaged :
சென்னை: அறந்தாங்கியில் பெரியார் சிலை மர்ம நபர்களால் நேற்று நள்ளிரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கபட்டதை கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்,
‘பெரியார் சிலையின் தலையை துண்டிக்கிற மிகக் கொடூரமான நிகழ்வு நடந்திருக்கிறது. இதை கடுமையாக கண்டிக்கிறேன்.
இது குறித்து காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி எடுக்காவிட்டால் பெரியார் மீது பற்றுகொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் திரண்டு கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுமென தமிழக அரசை எச்சரிக்கிறேன்’ இவ்வாறு கண்டனம் தெரிவித்து பேசினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்: இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அமைதியாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள்தான் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர்.
இத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையும் இனியும் அனுமதிக்கக்கூடாது என்று கூறினார்.
மேலும் அறந்தாங்கியில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவிக்கையில்,
‘பெரியாரின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கூட்டம் ஒன்று அவரது சிலைகளை சேதப்படுத்துவதையும், இழிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்று தெரிவித்தார் ‘ .
மேலும் தேர்தலை சந்திக்கும் நேரத்தில் அவரது சிலையை உடைத்து, கலவர விதைகளைத் தூவ நினைப்போரின் உள்நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி எதையும் சந்திக்க தயாராக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
“பெரியார் சிலை உடைப்புக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் எப்படியாவது சமூக பதற்றத்தை ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் ஆதாயம் தேட துடிக்கிற இத்தகைய செயல்கள் இழிவானவை.
பெரியாரை வெறுப்பவர்களோடு கைகோர்த்து கொண்டு நிற்கிற பழனிசாமி அரசாங்கம், தலைவர்களுக்கு நிகழும் இதுபோன்ற அவமரியாதைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது” என டிடிவி.தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளார்.